உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 9 பேர் பார்வை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சிகாரிகஞ்சில் இயங்கி வரும் நியூ ராஜேஷ் ஹைடெக் மருத்துவமனையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 30 பேருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 18 பேருக்கு, கண்களில் சீழ் மற்றும் ரத்தம் வடிதல், கடுமையான வலி ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 18 பேருக்கு கண்ணில் பேக்டீரிய தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதில், 9 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளது. 10 பேர் பார்வை இழந்துள்ளனர். இதை அடுத்து, இந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் முறையான கிருமி நீக்கம் செய்யப்படாததால் பாக்டீரிய தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.