பிரியாணி கடைகளில் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை Gen AI மூலம் வருவாய்த்துறை கண்டுபிடித்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணி கடை உரிமையாளர்கள், நாடு முழுவதும் செயல்படும் தங்களது கிளைகள் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக பில் முறைகேடு செய்து, சுமார் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த மோசடியை வருமான வரித்துறை, Generative Artificial Intelligence (Gen AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளது. சுமார் 60 டெராபைட் (TeraByte) அளவிலான பில்லிங் மற்றும் பரிவர்த்தனை தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
AI அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு மூலம், விற்பனை விவரங்களில் கணிசமான முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. பல கிளைகளில் ஒரே மாதிரியான பில் எண்கள், குறைக்கப்பட்ட விற்பனை பதிவுகள், பணமாக பெற்ற தொகைகள் கணக்கில் பதிவு செய்யப்படாதது போன்ற முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 6 ஆண்டுகளாக பில் தரவுகளில் மாற்றம் செய்து வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய வருமான வரித்துறைக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய கிளைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
