tamilnadu

img

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிடுக! - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கோட்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில், வந்தே மாதரம் பாடலில் உள்ள எல்லா பகுதிகளையும் முழுமையாக பாட கட்டாயப்படுத்தும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை பெறக்கோரி, தமிழகச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது:
"வந்தே மாதரம் என்ற சொற்றோடர் இந்தியத் தாய்க்கு செலுத்தும் வணக்கம் ( Vande Mataram - I Salute Mother India). இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்திரவு தேவையில்லை. இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தாய்க்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர். அது நமது உணர்வுடன் கலந்தது. உரிய மரியாதையுடன் தாய்க்கு வணக்கம் செலுத்த யாரும் தயங்க மாட்டார்கள். (No Indian will hesitate to salute Mother India - even without any order all Indians Salute Mother India).
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் சாசன நிர்ணய சபை (Constituent Assembly), நாடாளுமன்றமாகவும் (Parliament) அன்றையத் தேதியில் செயல்பட்டது. 
ஜனவரி 24, 1950 வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாக நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அதை அவைத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 
அன்றைய தேதியில் திருமதி. சுசேதா கிருபலானி அவர்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தியை மட்டுமே அவையில் பாடினார். 
அன்றைய தினம், சாரே ஜஹான் சே அச்சா பாடலின் சில வரிகளும், ஜன கண மன பாடலின் சில வரிகளும் பாடப்பட்டன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 
இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது எழுப்பப்பட்ட இறுதி முழக்கம் "இன்குலாப் சிந்தாபாத்" என்பதே ஆகும். இன்றுவரை "இன்குலாப் சிந்தாபாத்" என்ற முழக்கம் எழுப்பினால் இயல்பாக மக்கள் எழுந்து அதே முழக்கத்தை திரும்பச் சொல்கின்றனர். உணர்வின் வெளிப்பாடாக மதிக்கப்படுவதே விடுதலைப் போராட்ட முழக்கங்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்கள் இந்தியாவின் பன்முகத் தன்மையை மதித்து போற்ற நமக்கு வழிகாட்டி சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு மாற்றாக, நாடாளுமன்றத்தில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும் அதன் கூறுகளுக்கும் எதிராக, தனி மனித கண்ணியத்திற்கும், உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஜனவரி 28, 2026  தேதியிடிடப்பட்ட  உத்தரவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது‌. 
வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பகுதிகள் (First two Stanzas) தவிர மற்ற பகுதிகளில் (rest of the four stanzas) ஆனந்த மடம் நாவலில் வரும் கதாபாத்திரத்தின் நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டது. நாடகத்தில் வரும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் நம்பிக்கை சார்ந்த வரிகள். 
பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அனைவரின் நம்பிக்கைகளுக்கும் உரிய மதிப்பையும், மரியாதையையும் உரிமைகளையும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. 
வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பகுதிகள் தொடர்ந்து தேசியப் பாடலாக மக்கள் அனைவராலும் போற்றிப் பாடப்படுகிறது. தொடர்ந்து பாடப்படும், மதிக்கப்படும். 
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஜனவரி 28, 2026 தேதியிட்ட திடீர் உத்தரவு இந்தியாவின் பன்முகத்தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்திய ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. 
ஜனவரி 28, 2026 தேதியிட்ட வந்தே மாதரம் பாடலில் உள்ள எல்லா பகுதிகளையும் முழுமையாக பாட கட்டாயப்படுத்தும் "செயல் ஆணை"  (Executive Order) நாடாளுமன்றத்தை புறம் தள்ளி, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் அதன் கூறுகளுக்கு நேரெதிராக அமைந்திருப்பதால் இந்த உத்தரவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற ஒன்றிய அரசின் உள்துறைக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கிட வேண்டும். 
அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான குடியரசுத் தலைவர், இந்திய குடிமக்களுள் முதன்மையானவர் (First Citizen). 
மேன்மை தாங்கிய குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கிடவும், அதையேற்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 
அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள தவறும் என்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் காக்க வேண்டி கடமை உள்ள இந்தியர் என்ற அடிப்படையில், தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே மதித்துப் பாடவும், அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை பறித்திடும் நோக்கத்தில், மக்களாட்சி மாண்புகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையான உத்தரவாக வெளிவந்துள்ள ஜனவரி 28, 2026 உத்தரவை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஏற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய மக்கள் இந்த உத்தரவை ஏற்க இயலாது என்று அறிவித்திட வேண்டும் என்று இந்தியர் அனைவரையும்  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 
தமிழ்நாடு மாநிலச் சட்டப் பேரவையில் ஒன்றய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இந்தியாவின் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் இத்தகையத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது."
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.