புதுச்சேரி, ஏப். 18- கொரோனா நிவாரணம் பெற போலி ஆவணம் சமர்பித்தால் பேரிடர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை ஆட்சியர் வல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது. புதுவை ஒன்றியத்தில் ஆயிரத்து 898 பேருக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கருணைத் தொகை பெற தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பித்து பயனடைந்திருப்பார்கள் என கருதப்படுகிறது. உச்சநீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், கொரோனா தொடர்பாக தவறான முறையில் பயன் பெறுவதை தடுக்க காலம் வரையறுத்துள்ளது. அதன்படி கடந்த 20க்கு முன்பு நிகழ்ந்த இறப்பு தொடர்பாக 24.3.2022இல் இருந்து 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கருணைத்தொகை பெற விரும்புவோர் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் மேல் வரையறை செய்யப்பட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்க இயலாதவர்கள், குறைதீர்ப்பு குழுவின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணையை கருத்தில் கொண்டு பயன்பெற விரும்புவோர் காலவரையறையை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தவறான முறையில் தங்கள் விண்ணப்பத்தை சமர்பித்து நிவாரணம் பெற முற்படுபவர்கள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் பிரிவு 52இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.