states

img

ஜார்கண்ட்: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் கைது

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்துவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி சீமா பத்ரா, அம்மாநில பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருப்பவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இத்தம்பதியனருக்கு உதவியாக பழங்குடிப் பெண்ணான சுனிதா(29) பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டுள்ளார்.பின்னர் சீமா தில்லியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சுனிதாவை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.அங்கு சில காலம் இருந்த சுனிதா மீண்டும் ராஞ்சியில் உள்ள வீட்டிற்கு வந்ததும் அவரைக் கடுமையாக சீமா கொடுமைப்படுத்தியுள்ளார்.

சீமாவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவுக்கு உதவ முயன்று ஜார்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமாவின் வீட்டை சோதனை செய்த காவலர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தத்துடன் சீமா பத்ராவைக் கைது செய்தனர்.

காவல்துறை விசாரணையில் சீமா பத்ரா சுனிதாவின் பற்களை இரும்புக் கம்பியால் உடைத்ததுடன் சூடான பாத்திரங்களைக் கொண்டு உடம்பில் சூடு வைத்துள்ளார். மேலும், நாக்கால் சிறுநீரை நக்க வைத்ததுடன், கழிவறையையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.