தில்லியில் 2026 ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் 509 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 807 பேர் காணாமல் போயுள்ளதாக அம்மாநில காவல்துறையின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் தில்லியில் 509 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 807 பேர் காணாமல் போயுள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போயுள்ளனர். காவல்துறையினர் 235 பேரைக் கண்டுபிடித்துள்ளனர், சுமார் 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல் போனவர்களில், 191 பேர் சிறார்கள் (45 பேர் சிறுவர்கள், 146 சிறுமிகள்). சராசரியாக ஒவ்வொரு நாளும் 13 சிறார் காணாமல் போயுள்ளனர்.
இதில் பதின்ம வயதினர் (12 -18 வயது) 169 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் 138 சிறுமிகள், 31 பேர் சிறுவர்கள். இவர்களில் 29 சிறுமிகள் மற்றும் 19 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 121 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
8 முதல் 12 வயதுக்குட்பட்ட பிரிவில், 8 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகள் உட்பட 13 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்; அவர்களில் 3 சிறுவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். எட்டு வயதுக்குட்பட்ட பிரிவில், 9 குழந்தைகள் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது; 3 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆறு குழந்தைகளைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
2025-ஆம் ஆண்டில், தில்லியில் மொத்தம் 24,508 பேர் காணாமல் போயுள்ளதாகப் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் பெண்கள் (14,870) காணாமல் போயுள்ளனர். ஆண்கள் 9,638 பேர் காணாமல் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 15,421 பேர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், 9,087 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தரவுகளின் மூலம் பெண்கள் அதிக அளவில் காணாமல் போயுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
