கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த 8ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சியல்டா மாவட்ட நீதிமன்றம், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கான தண்டனை விபரங்கள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.