கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி ஓய்வுபெற்ற மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா பாஜகவில் இணைந்தார்.
ரோகித் ஆர்யா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2015-ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான நபருக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொள்ளுமாறு உத்தரவிட்டது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், பாலியல் வழக்குகளை கையாளுவதற்கான நெறிமுறைகளை கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது.
அதே போல், ரோகித் ஆர்யா கடந்த 2021-ஆம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் அளித்த புகாரின் பேரின் கைது செய்யப்பட்ட நகைச்சுவையாளார் முனாவர் ஃபரூக்கியின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய ரோகித் ஆர்யா, கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதனை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 13-ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநில பாஜகவில் இணைந்தார்.