ஜூன் 1- மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கார் மாவட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தியுள்ளார்கள். மே 30 அன்று நடைபெற்ற இந்தப் பேரணியில் பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் மிகவும் பெரும்பான்மையாகக் கலந்துகொண்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தூதுக்குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை முடியும்வரையிலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
கடந்த மூன்று மாதங்களில் பால்கர் மாவட்டத்தில் தானே பகுதியில் உள்ள விவசாயிகள் நான்காவது தடவையாக இவ்வாறு பெரும் திரளாக அணிவகுத்து வந்துள்ளார்கள்.
அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுடன் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்குப்பின்னர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த் போட்கே, விவசாயிகள் சங்கம் வன உரிமைகள் நில உரிமைகள், தண்ணீர் மற்றும் பாசனம் சம்பந்தமான பிரச்சனைகள், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், ரேஷன் மற்றும் சில பிரச்சனைகள் மீது தீர்வு கண்டிருக்கிறார். இவற்றைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்துவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.
இவ்வாறு இவர் உறுதி அளித்துள்ள உறுதிமொழிகளில் முக்கியமான மூன்று பின்வருவனவாகும். (1) வன உரிமைகள் சட்டத்தின்கீழ் சுமார் 61 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பழங்குடியினருக்கு உரிமை வழங்கப்படும். (2) நில உரிமைகள் தொடர்பாக வந்துள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மீதும் கிராமவாரியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆக்கப்பூர்வமான முறையில் முடிவுகள் காணப்படும். (3) நில உரிமையாளர்கள் இல்லாது பழங்குடியினர் காலங்காலமாக விவசாயம் செய்துவரும் நிலங்களைப் பொறுத்தவரை முதலில் அவர்கள் குத்தகைய விவசாயிகளாகப் பதிவு செய்யப்பட்டு பின்னர் உரிமையாளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள்.
இப்போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மாநிலத் தலைவர் உமேஷ் தேஷ்முக், மாநில செயலர் அஜித் நவாலே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, சிஐடியு மாநில செயலர் வினோத் நிகோலே,எம்எல்ஏ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் நந்தகுமார் ஹடால் முதலானவர்கள் முன்னின்று நடத்தினார்கள்.
(ந.நி.)