states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

இந்தியா முழுவதும்  2,800க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரகசியமாக கிடைக்கப்பெறுகிற தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெரும் நிதியை குவித்துள்ள கட்சிகள் 19 மட்டுமே. இவற்றிலும் கூட 68சதவீதம் அளவிற்கு மிக மிக அதிகமான நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக குவித்துள்ள கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. கடந்த மூன்றாண்டுகளில் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றிருக்கும் தொகை ரூ.6,201 கோடி. 2020ஆம் ஆண்டில் தலைமைத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட ஒரு உறையில், நாட்டில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்தல் பத்திரங்கள் மூலமாக  நிதி பெறும் 105 அரசியல் கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு அறிக்கை தந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவல் மூலம் நாட்டின் அனைத்து கட்சிகளுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காசு வாங்குகின்றன என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. தேர்தல் பத்திரங்களை அனுமதித்ததன் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதற்கு ஒரு சீரிய வழி உருவாக்கப்பட்டுவிட்டதாக பாஜக பிதற்றியது. ஆனால் உண்மையில் 19 கட்சிகள் மட்டுமே பெற்றுள்ளன என்பதும் அதிலும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ள 17 கட்சிகள் பெற்றுள்ளன என்பதும் அதில் குறிப்பாக பாஜக என்ற ஒரே தனிப்பட்ட கட்சிதான் மிக அதிகமான நிதியை பெற்றுள்ளது என்பதும் சமீபத்திய “ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” அமைப்பின் செய்தியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக இவர்கள் மாற்றியிருக்கிறார்கள். தனது கூட்டுக் களவாணிகளிடமிருந்து பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான நிதியைக் குவித்து பலம் பெற்று வருகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். 

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள், அக்கட்சியின் பணியைச் செய்த அதிகாரப்பூர்வ ஊழியர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களை “உதிரி நபர்கள்” என்று பாஜக தற்போது குறிப்பிடுகிறது. அதிகாரப்பூர்வமான ஊழியர்கள் எப்படி உதிரிகளாக இருக்க முடியும்? மத வெறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மதச்சார்பின்மை அடித்தளத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிற மோடி அரசுக்கு உண்டு.