டோங்கா, ஜன. 17- ஒரு பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டதைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூசிலாந்து விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.இந்த எரிமலை உமிழ்வு காரண மாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன. டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளும் செயல்படவில்லை. பெரு, சிலி, ஃபிஜி ஆகிய நாடுகளில் ஆக்ரோஷ மான சுனாமி அலைகள் தாக்கின. கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தன. டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலு வைச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தன. சுனாமி “கணிசமான சேதத்தை” ஏற்படுத்தியதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியிருக்கிறார். இருப்பினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. சனிக்கிழமையன்று நீருக்கடியில் எரிமலை வெடித்தது. இதைத் தொடர்ந்து
1.2 மீ (4 அடி) அலைகள் டோங்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. டோங்காவிலிருந்து சுமார் 2,383 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியூசிலாந்தில் இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சத்தமாகவே கேட்டது. டோங்காவில் உள்ள நியூசிலாந்தின் தூதர் பீட்டர் லூண்ட், எரிமலை சாம்பல் அடுக்கால் மூடப்பட்ட பிறகு, “நிலாவைப் போல்” டோங்கா இருப்பதாகக் கூறினார்.தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெசிந்தா கூறியுள்ளார். சாம்பல் காரணமாக மக்களை பாட்டில் தண்ணீரைக் குடிக்கவும், நுரையீரலைப் பாதுகாக்க முகமூடிகளை அணியவும் வேண்டியிருக்கிறது. சாம்பல் மூடியதால் மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து காரில் தப்பிச் செல்ல மக்கள் முயன்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவியிருக்கின்றன.டோங்கோ தீவில் வசிக்கும் சுமார் 1,05,000 பேரை அணுக முடியவில்லை. மிகப்பெரிய வெடிப்புக்கு முன்னதாக, எரிமலை பல நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. சில பகுதிகளில் கந்தகம் மற்றும் அம்மோனியா வாசனை வீசுவதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.