states

img

நடிகர் திலீப் மீதான பாலியல் வல்லுறவு வழக்கு , கூடுதல் சாட்சிகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கொச்சி, ஜன.17- நடிகையை பாலியல் வல்லுறவு செய்து காட்சிகளை படம் பிடித்த நடிகர் திலீபுக்கு எதிரான வழக்கில் மேலும் பல சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அரசு தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே உள்ள சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அரசுத் தரப்புக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி கவுசர் இந்த உத்தரவு பிறப்பித்தார். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த இரண்டு மனுக்களில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்து நாட்களுக்குள் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்றும் இதற்கு எதிர்மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்துள்ள பின்னணியில், புதிய சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் அரசுத் தலைமை இயக்குநர் டி.ஏ.ஷாஜி, கூடுதல் அரசு வழக்கறிஞர் பி.நாராயணன் ஆகியோர் ஆஜராகினர். 16 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அரசுத் தரப்பு முன்னதாக விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் பயன்படுத்திய கை பேசிகளின் உரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களுடன் சாட்சிகளை அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். டிஜிட்டல் சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழை முறையாக சமர்ப்பிக்கவும் அனுமதி கோரப்பட்டது. இந்த கோரிக்கைகளை மறுப்பது சட்டவிரோதமானது என்று அரசு தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது.