சென்னை,ஜன.25- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாக 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்; இது குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இந்த வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டது: சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2.10.2022 அன்று வேங்கை வயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் முரளி ராஜாவின்தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது காவல்துறையினர் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகி உள்ளது. மேலும், இச் சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வு க்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்கள், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரை யாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக் கப்பட்டு முரளிராஜா, சுதர்ஷன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே, இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.