காஞ்சிபுரம், நவ.2- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடியாகும். இதில் 2,764 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1180 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.64 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதனன்று (நவ.2) உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்தார். அதன்படி, ஏரியிலிருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கரையோர கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தினார். புழல், செம்பரம்பாக்கம் ஏரிக ளில் இருந்து ஒரே நாளில் தண்ணீர் திறக்கப்படுவதால் உபரி நீர் செல்லும் பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் உள்ள வர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்த 2 ஏரிகளுக்கு வரும் நீர் வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரிக்கும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2,692 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயர மான 21 அடியில் நீர் மட்டம் 19 அடியை நெருங்கி உள்ளது. ஏரியில் 18.42 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.