நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டை, இது ‘சமநிலை பட்ஜெட்’ என்று முதலாளிகள் வரவேற்றுள்ளனர். “நிதி விவேகத்துடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் பட்ஜெட் இது. நடப்பாண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கு 6.4 சதவிகிதமாக உள்ள நிலையில், அதனை 2023-24 நிதியாண்டில், 6 சதவிகிதத்திற்குக் கீழே 5.9 சதவிகிதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்க சமநிலையாகும். சிறு, குறு தொழிற்துறைக்கான ரூ. 2 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டம் போன்ற இன்னும் பல முன்முயற்சிகளும் பட்ஜெட்டில் உள்ளன. இதன்மூலம் சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் பயன்பெறும்” என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தலைவர் சஞ்சீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
“2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் மிகவும் சீரானதாகவும், வளர்ச்சிக்கானதாகவும் இருக்கிறது. இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். கணிசமான செலவினங்களுடன் விவசாயத் துறையில் தெளிவாக கவனம் செலுத்துகிறது, மேலும் நகரமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலிலும் கவனம் செலுத்துகிறது. கேபெக்ஸ் (மூலதன) செலவினத்தை 10 லட்சம் கோடியாக உயர்த்தியதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது 2022-23 நிதியாண்டில் 2.7 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது, அது ஜிடிபியில் 3.3 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க வகையில் அரசுத் தலைமையகத்தில் இருந்து தனியார் துறைகளுக்கு மாற்றும் ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் உணர்கிறோம்” என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) தலைவர் சுப்ரகாந்த் பாண்டா வரவேற்றுள்ளார்.
“கட்டமைப்பு தொடர்பாக தெளிவான பார்வை கொண்ட நேர்த்தியான பட்ஜெட். வருமானம் ஈட்டும் அனைவருக்கும் உடனடி பலன்களை அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் தனிநபர் வருமானத்தையும் 1.97 லட்சத்திலிருந்து (2400 டாலர்) அதிவேகமாக அதிகரிக்க அடித்தளம் அமைக்கிறது. நிதியமைச்சர் அறிவித்த பெயருக்கு ஏற்றாற் போன்றே: இது அமிர்தகாலத்திற்கான முதல் பட்ஜெட்” என்று கோடாக் முதலாளி உதய் கோடாக் வரவேற்றுள்ளார்.