“ஏன் இப்பல்லாம் ஃபோன் செய்யறது இல்ல... அவரு இருந்தவரைக்கும் அவரோட பேசினீங்க... என்னையும் அழைத்து ஹாஸ்யமா சிரிக்க சிரிக்க நல்லாப் பேசுவீங்க... அவர் போனதுக்கப்புறம் ஏன் அழைப்பே இல்ல.....நானும் தோழர் தானே?” என்று எழுபத்தைந்து கடந்த ஒரு பெண்மணி கேட்கும் போது என்ன பதில் சொல்ல முடியும்! இந்த ஆண்டு மார்ச் 16 அன்று அவரை அலைபேசியில் அழைத்துப் பேசும்போது அவரது உரையாடல் தொடங்கியது இப்படித் தான். உள்ளபடியே மார்ச் 19 அன்று அவர் இல்லத்திற்கு வர இருக்கிறோம் என்பதைச் சொல்லவே அவரை அழைத்தது. அவரது அன்புத் துணைவர் - பாரத ஸ்டேட் வங்கியில் பணி நிறைவு செய்த அதிகாரி - தோழர் அகோரபாண்டியன் அவர்கள், 2023இல் அந்த நாளில் தான் காலமானார். முதலாம் ஆண்டு நினைவு நாளில் அங்கே சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அங்கே குழுமும் அன்பர்களிடையே அவரது நினைவலைகள் பகிர்ந்துவிட்டு வர எண்ணியே அந்த அழைப்பு. அகோரபாண்டியன் வங்கியில் சேர்ந்தபிறகு தனது இடதுசாரிப் பார்வையை மேலும் கூர் தீட்டிக் கொண்டவர். வாசிப்பில் பேரார்வம் கொண்டிருந்த அவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக மார்க்சிய அழகியல் குறித்த பரிச்சயமும், தேடலும், ரசனை மிக்க பகிர்வுமாக வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொண்டவர். இடமாற்றலில் தில்லி சென்றபோது, கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள நூல் நிலையத்தில் வாரம் தவறாது பீப்பிள்ஸ் டெமாக்ரசி வாங்கி வந்து படிப்பாராம். அப்படியான நாளொன்றில், விமானப்படையில் பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள கணேஷ் கண்ணில் இவர் பட்டுவிட, பிறகு இருவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.இராமச்சந்திரன் அவர்களிடமிருந்து வாரா வாரம் தீக்கதிர் ஏடுகளை மொத்தமாக வாங்கிவந்து பகிர்ந்து படித்துக் கொள்வார்களாம்.
நல்ல பணியில் இருந்த தனது முதல் மகனை விபத்தில் இழந்த போது சரிந்துவிடாது தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது தோழமை உறவுகளே என்பார் அகோரபாண்டியன். சென்னை மாடம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லம் புத்தகம் சூழ்ந்த வீடாக இருக்கும். அவரது வீட்டுக்குச் சென்று வருவது தோழமை நேயத்தின் நெகிழ்ச்சித் திருவிழாவாக அமையும். ஒவ்வோர் ஆண்டும் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பித்து வழங்க ஜனவரி/பிப்ரவரி மாதத்தில் அங்கே செல்வது கொண்டாட்டமான நேரமாக இருக்கும். தன்னுடைய மாமனார் பொதுவுடைமை இயக்கத் தலைவர் இராமகிருஷ்ணனைப் பற்றி சிலாகித்துச் சொல்லாமல் உரையாடல் தொடங்காது. இணையர் நாகலட்சுமி, ஜனநாயக மாதர் சங்கத் தொண்டராக விளங்கியவர் என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிடுவார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அகோரபாண்டியன் மறைவுச் செய்தி வந்தது. நாகலட்சுமி அம்மாவோடு அலைபேசியில் பேசித் தான் ஆறுதல் சொல்ல முடிந்தது.
இந்த ஆண்டு மார்ச் 19 அன்று நேரில் வருகிறோம் என்று சொல்ல அழைத்தபோது பிடித்துக் கொண்டார். என்னிடம் ஏன் பேசுவது இல்லை என்ற நியாயமான கேள்வியால் துளைத்தார். அகோரபாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் நேரில் சென்று, நெருக்கமான குடும்ப நண்பரும் தோழருமான கங்காதரன் ஏற்பாட்டில் எளிய நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய பின், அண்மையில் அழைக்கையில்தான், அவரது இயக்க வாழ்க்கை பற்றிச் சொன்னார். இளமைக் காலத்தில் தந்தை அளித்த உற்சாகத்தில் மாதர் சங்க இயக்கத்தில் பணியாற்றியது எல்லாம் சொல்லலானார். தந்தை மறைந்தபோது, தனது தாயிடம் “எப்போதும் போல் இருக்கணும். வெள்ளைப் புடவை அணியக்கூடாது, யாரென்ன சொன்னாலும் சொல்லி விட்டுப் போகட்டும்...நான் தானே உன்னோடு இருக்கப்போகிறேன்” என்று மன்றாடிய காலத்தை நினைவு கூர்ந்தார். ஆனால் அவருடைய தாய், சமூக வழக்கத்தை மீறத் துணியவில்லை. எனினும், வீட்டில் முடங்கிக் கிடக்க நேரிட்டதால் அதுவரை வாசிக்காத கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் எல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பித்தாராம். அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வண்ணம் அகோரபாண்டியன் புத்தகங்கள் கொடுக்க ஆரம்பித்தாராம்.
“எங்க தோழர் தான் அம்மாவுக்காக எளிய தமிழில் வரும் புத்தகங்கள் நிறைய வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். எங்க அம்மாவும் அவரிடம், ‘மாப்பிள்ளை...90 பக்கம் படிச்சிட்டேன்... முடிச்சுருவேன்... அடுத்த புத்தகம் எங்கே?’ என்று கேட்பார்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நாகலட்சுமி. “காரைக்குடியில் இருந்தோம் அப்போது....மாதர் சங்கத்தைக் கட்டுகின்ற தொடக்க காலப் பணிகளில் நான் மூழ்கி இருப்பேன்...தேவகோட்டை போய் வரவும், வரதட்சணை கொடுமை வழக்குகள் எடுத்துத் தலையிட்டு நியாயம் கேட்டு முயற்சிகள் எடுக்கவுமாக போராட்டமான காலம்....அப்புறம் எங்க தோழருக்கு வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலில் செல்ல வேண்டி வரவும், கொஞ்சம் கொஞ்சமா இழை விட்டுப் போச்சு...ஆனால், எல்லாத்தையும் தாங்கிட்டு நிக்க இந்த அனுபவங்கள் தான் துணையா இருக்கு” என்றார். பேச்சினூடே, தற்போதைய நாட்டு நிலவரம் பொது விஷயமெல்லாம் தெளிவாக எடுத்து வைத்தார். “எப்படி இப்படி சரளமாகச் சொல்கிறீர்கள்?” என்று வியப்போடு கேட்டபோது, பதில் பட்டென்று வந்தது: “தீக்கதிர் இப்பவும் தொடர்ந்து வந்துட்டிருக்கு இல்ல....கங்காதரன் வந்து சந்தா காசு வாங்கிக்கிட்டுப் போனாரே ...பேப்பர் தொடர்ச்சியா படிச்சிருவேன்” முத்திரைச் சிரிப்புடன் விடைபெற்றார் தோழர் நாகலட்சுமி.