மதுரை, செப்.15- பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இதற்காக ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜீவகுமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் என்ற பெயரில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கான 1.50 முதல் ஐந்து சதவீதத் தொகையை விவசாயிகளும், எஞ்சிய தொகையை ஒன்றிய, மாநில அரசுகள் சமமாகவும் வழங்குகின்றன.
மூன்றாண்டுகளாக செயல்படுத்தவில்லை
டெல்டா பகுதியில் குறுவைப் பருவத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரிலும், சம்பா பருவத்தில் 13 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி நடை பெறும். தஞ்சாவூர் மாவட்டத் தில் குறுவைப் பருவத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும். ஆண்டு தோறும் குறுவை, சம்பா சாகுபடியின் போது பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவைச் சாகுபடிக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பல மாநிலங்களில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் குறுவைச் சாகுபடி காலத்துக்கும் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல் படுத்தப்படாததால் ஒன்றிய அரசின் சலுகைகள் கிடைக்க வில்லை. பேரிடர் மேலாண் மைத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். குறுவைச் சாகுபடிக்கு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்படாததால் விவசாயிகளால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தைவிட்டு வெளியேறும் நிலை
இந்த ஆண்டு காவிரியில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. இதனால் பயிர்கள் வாடிப் போயுள்ளன. பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் விவசாயிகள் உரிய நிவாரணம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தாண்டு கர்நாடகாவில் மழை குறைவாக உள்ளது. இதனால் டெல்டா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆண்டு முழுவதும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடு கையில், விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணையதளம் செயல்படவில்லை. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்துக் கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.
வணிக நிறுவனங்கள் போல் செயல்படுவதா?
அதன்பின்னர் நீதிபதிகள், ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதை முறையாகச் செயல் படுத்துவதில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தில் சேர பல்வேறு கட்டுப்பாடு களை விதித்தால் எவ்வாறு பயனடைய முடியும். காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நிறு வனங்களைப் போல் செயல் படுகின்றன. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப். 20-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.