states

சொத்து வரி 25 முதல் 150 விழுக்காடு உயர்வு!

சென்னை,ஏப்.2- தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை மாநில அரசு உயர்த்தியிருக்கிறது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையம், தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் வகையில், 2021-2022ஆம் ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும்  பேரூராட்சிகளில் கீழ்க்கண்ட வாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.  600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 விழுக்காடு மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 விழுக்காடு மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.  1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 விழுக்காடு மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 விழுக்காடு சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது.  தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 விழுக்காடு, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 விழுக்காடு உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, சென்னையின் பிரதான நகர பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 விழுக்காடும், சென்னை யோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும்  இதர மாநகராட்சிகளில் 25 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. மேலும், சென்னையின் பிரதான நகர பகுதிகளில் உள்ள 600-1,200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 விழுக்காடும், 1,201-1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 விழுக்காடும், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது.

சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1.200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 விழுக்காடும், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 விழுக்காடும், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது. சென்னையின் பிரதான  நகர பகுதிகளில் வணிக  பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100  விழுக்காடும், சென்னை யோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள்  மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 விழுக்காடும், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 விழுக்காடும், சொத்து வரியினை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62.40 விழுக்காடாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 விழுக்காடும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பதால் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் நேரு விளக்கம்

தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, “இந்த வரி உயர்வை 2018 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் 200 விழுக்காடு உயர்த்தியிருந்தார்கள். தேர்தல் வருகிறது என்ற காரணத்தால், முழுமையாக அதை நிறுத்தி வைத்தவர்கள். அதிமுக ஆட்சியின்போது ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல், ஒரே வகையில் வரி உயர்வு செய்யப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதலாகவும் வரியை உயர்த்தியிருக்கிறார். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.