திருப்பூர், மார்ச் 2 - திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பாக உள்ளனர். வதந்தி பரப்புவோர் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: திருப்பூரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு சில மாநிலங்களில், முக்கியமாக பீகாரில் தற்போது செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் அங்கிருந்து விசாரித்து வருகின்றனர். பலர் இங்கிருந்து வெளியேறிச் செல்வதாக செய்தி ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. ஆனால் இங்கு அனைவருக்கும் பாதுகாப்பான நிலை உள்ளது. பனியன் நிறுவன மனிதவள மேலாளர்களை வரவழைத்து மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தொழிலாளர் துறை மூலமாகவும் கூட்டம் நடத்தி பாதுகாப்பு இருக்கும் விபரத்தை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம்.
காவல் தனிப்பிரிவு
சமூக ஊடகங்களில் இரண்டு, மூன்று வீடியோக்களை பொய்யாக சித்தரித்து வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் அவை இங்கு நடைபெற்ற சம்பவங்கள் இல்லை. சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் வட மாநிலத் தொழிலாளர் பிரதிநிதிகள் இருப்பார்கள். செல்போன் எண்: 94981 01320, தொலைபேசி எண்: 0421 2970017 மூலம் இந்த பிரிவை வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
அனைவருக்கும் பாதுகாப்பு
இங்கு அனைத்து மாநிலத்தினரும் தகுந்த பாதுகாப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. வதந்தி பரப்பும் வீடியோக்களை வட மாநிலத் தொழிலாளர் உட்பட யாரும் நம்ப வேண்டாம். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையப் பகுதிகளிலும் தனித்தனி காவல் ஆய்வாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தொழிலகங்களில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளது, வதந்தியை நம்ப வேண்டாம் என்று நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இணைய பக்கத்தில் பதிவு
தற்போது இங்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் பிற மாநிலத் தொழிலாளர்களைப் பதிவு செய்ய தனி இணையதளப் பக்கம் உள்ளது. அதில் தொழில் முனைவோர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விபரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் சுமார் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் அதிகமாக பீகார், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம்
மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் துறை இணைந்து இங்கு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் தருவதை உறுதிப்படுத்த தொழில் துறை சார்ந்த முதலாளிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம். உடுமலையில் கூட அண்மையில் ஒரு சம்பவத்தில் குறைந்தபட்ச ஊதியம் தருவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது. மேலும் இங்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் துறையினர் கொண்ட ஒரு குழு மூலம் அவர்கள் பிரச்சனைகளை அறிந்து உடனடியாகத் தலையீடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த குழுவைத் தொடர்பு கொள்ளலாம். திருப்பூரில் அமைதியான சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அமைதியான சூழ்நிலை உள்ளது. எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை. எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உடனிருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விபரத்தை மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா, இந்தி மொழியில் தெரிவித்து அந்த செய்தி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது.