states

கந்தப்பகோட்டை தலித் மக்கள் மீது தாக்குதல்: திண்டுக்கல் ஆட்சியர் - எஸ்.பி.க்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

திண்டுக்கல், மே.31- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கந்தப்பகோட்டையில் தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   நிலக்கோட்டை வட்டம் கந்தப்பகோட்டையில் உள்ள தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்தியினர்  தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர் வெட்டப்பட்டனர். வீடு மற்றும் உடமைகள் சேத மடைந்தன.  இது தொடர்பாக நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, கந்தப்பகோட்டை தாக்குதல் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று  சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  

கந்தப்ப கோட்டையில் தாக்குதலில் தலித் மக்கள்  எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு எஸ்.சி.எஸ்.டி. பிரிவின்படி வழக்கு பதியப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? இந்த வழக்கு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கந்தப்பகோட்டை மக்களுக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையை மின் அஞ்சல் மூலம் தங்களுக்கும், தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  (நநி)