states

மண்டைக்காட்டம்மன் வரலாறு நூல் வெளியிட தடை

‘மண்டைக்காட்டம்மன் வரலாறும் வருணாசிரம ஆக்கிரமிப்பும்’ என்கிற நூல் வெளியிடுவதை இந்து முன்னணி அமைப்பினரின் புகாரைத் தொடர்ந்து தடுத்து நிறுத்திய நடவடிக்கை, இந்துத்துவா சக்திகளுக்கு குமரி மாவட்ட காவல்துறை அடிபணிகிறதா என்கிற கேள்வியை எழுப்புவதாக க.கனகராஜ் குறிப்பிட்டார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் திங்களன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:  மண்டைக்காட்டம்மன் வரலாறும் வருணாசிரம ஆக்கிரமிப்பும் என்கிற புத்தகத்தை என்.முருகேசன் எழுதியுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவராகவும் செயல்பட்டவர். இதில் பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துரையும், எழுத்தாளர் பொன்னீலன் அணிந்துரையும் எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தை மே 19 ஆம் தேதி வெளியிட திட்ட மிடப்பட்டிருந்தது. திடீரென புத்தகம் வெளியிட அனுமதி மறுத்து வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் 18 ஆம் தேதி ஒரு அறிவிப்பு கடிதம் கொடுத்துள்ளார். புத்தக வெளியீடு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால் அனுமதி கோர வேண்டிய அவசியம் எழவில்லை. ஆனால் இந்து முன்னணி என்கிற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது எனக்கூறி நிகழ்ச்சியை தடுத்துள்ளனர். இது சரியல்ல. காவல்துறையினர் மீது நடவடிக்கை தேவை பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் ஒரு பகுதி இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதைக் காண முடிகிறது. உதாரணமாக 2022இல் சிஐடியு மாநில மாநாடு இங்கு நடந்தது. நாகர்கோவிலில் நவம்பர் மாதம் பேரணி-பொதுக்கூட்டம் நடத்த ஆகஸ்டில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பேரணி அந்த தேதியில் நடப்பதாக கூறி அனுமதி மறுத்தனர். நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சிக்கு பணம் செலுத்தி ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை மறுக்கக் கூடாது என தெரிவித்தனர். காவல்துறையில் உள்ள சிலர் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய பதற்றம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அதை முன் வைத்து ஜனநாயக இயக்கங்கள் செயல்படுவதை தடுக்கிறார்கள். காவல்துறை தலைவர் இந்த மாவட்டத்தில் நீண்ட நாட்களாக காவல் பிரிவுகளில் பணியில் இருப்போரின் அரசியல் சார்பு குறித்து விசாரிக்க குழு அமைத்து உரிய மாற்றங்களை செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.