சென்னை, ஏப். 18 - சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்பதற்கான ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினர் 4 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பெண் செய்தியாளர்களை பற்றி அவதூறு ஆபாச பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பிரமான பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு திங்களன்று (ஏப்.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்திருந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை ரீடிவீட் செய்ததாகவும், அதனை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்து, அதற்கான பதிவுகளை தாக்கல் செய்தார். அப்பொது குறுக்கிட்ட நீதிபதி மற்ற பதிவுகளை எஸ்.வி.சேகர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம், ஆனால், இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது. சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ்.வி.சேகர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.