states

8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை, மே 15 - தமிழ்நாட்டில் திருப்பூர், மதுரை, தேனி. அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.  இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், “திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணி க்கப்பட வேண்டும். மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வீடு, வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசுப் புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;