states

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தீட்சிதர்கள் விற்றதற்கான ஆதாரத்துடன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை,அக்.24- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சி தர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அற நிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை (அக்.24)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், கோவில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசம் இல்லை என்றும் எந்த நிலத்தையும் தீட்சிதர்கள் விற்கவில்லை என்றும் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். மேலும் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கோவில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அறநிலையத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988 ஆம்  ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கோவி லுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு  தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளை தாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு வழக்கறி ஞர் தெரிவித்தார். இதையடுத்து  அறநிலையத் துறை தரப்பு அறிக்கைக்கு பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை யை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.