திருச்சி, ஏப். 11 - தீக்கதிர் செய்தி எதிரொலியால் பாரதிதாசன் பல்கலை. கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டண உயர்வு அநீதியானது என்றும் 2018-2019 கல்வி ஆண்டிலிருந்து அமலில் இருந்து வந்த அரசு கல்லூரி கட்டண அமைப்பை தான் ஒட்டு மொத்தமாகவும் தனி மாணவர் ஒருவரின் கட்டண சுமையையும் 107 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நியாயப்படுத்த முடியாதது. மாநில அரசு உடனே இதில் தலையிட்டு பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வை ரத்து செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதையே மாணவ-மாணவியர் மற்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என தீக்கதிரில் செய்திக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த அநியாய கட்டண உயர்வை எதிர்த்து பல கல்லூரிகளில் மாணவர்களுடைய போராட்டங்கள் நடைபெற்றன. மாணவர்களின் கோரிக்கையின் நியாயத்தை கல்லூரி பேராசிரியர்களும் வெளிப்படுத்தவும் செய்தனர். தொடர்ந்து 5ஆம் தேதி அன்று பல்கலை. துணைவேந்தரை அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில, மண்டல நிர்வாகிகள் சந்தித்து சங்கத்தின் சார்பில் மனுவும் கொடுத்தனர். பல பத்திரிகைகள் கட்டண உயர்வை மட்டும் குறிப்பிட்டு செய்திவெளியிட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணங்களை நிறுத்தி வைத்து ஞாயிறன்று பல்கலைக்கழக நிர்வாகம் ஆணை பிறப்பித்து இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ளது. இதன் பின்னணியில் மாநில அரசின் தாமதமில்லா குறுக்கீடு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அந்த ஆணை நிறுத்தி வைப்பு ஆணை மட்டுமே. கட்டண உயர்வு முழுமையாக திரும்பப்பெறப்பட வேண்டும். உயர்கல்வியை பெற ஏழைஎளிய கிராமத்து பிள்ளைகளுக்கு அரசு கல்லூரிகளை விட்டால் வேறு வழியில்லை என்பதை பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைகளை ஆளுநர் மூலமாக தமிழக கல்லூரிகளில் கொண்டு வந்து திணிக்கும் முகவர்களாக துணைவேந்தர்கள் மாறிவிடக்கூடாது. அந்நிலை தமிழகத்தில் உருவானால் மாணவர்களும் பேராசிரியர்களும் கரம் கோர்த்த போராட்டக் களங்களாக கல்லூரிகள் பல்கலைக்கழக வளாகங்கள் மாறும் சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்பப்பெறப்படவேண்டும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நீடா சுப்பையா