சேலத்தில் கலைஞர் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்டதற்கு சிபிஎம் கண்டங்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
சேலம், அண்ணாநகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலை மீது சமூக விரோத சக்திகள் கருப்பு பெயிண்ட் வீசி அவமதித்துள்ளனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு போர்த்துவது, பெரியார் - அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுவது என்பன போன்ற அவமதிக்கும் செயல்கள் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதை பார்க்க முடிந்தது. கருத்துக்களை எதிர்கொள்வதற்குப் பதிலாகக் கருத்தை சொல்லும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மறைந்த தலைவர்கள் என்றால் அவர்களின் சிலையைச் சேதப்படுத்துவது, சிலைக்கு கருப்புச்சாயம், காவிச்சாயம்பூசுவதன் மூலம் அவமதிப்பது என்பது ஒரு போக்காகவே மாறியிருக்கிறது. இது நாகரீக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.
கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இத்தகைய செயல்களுக்குப் பின்னால் கலவர நோக்கங்கள் உள்ளனவா என்பதை காவல்துறை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.