states

காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.27- தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவில் மின் விபத்தில்  உயிரிழந்தோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை தெரிவித்துள்ளது. காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஏப்ரல் 27 அன்று மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு தஞ்சாவூரில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு மாநிலக்குழு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நடைபெற்றுள்ள கோர விபத்து அதிர்ச்சி தருகிறது. உயர் மின்அழுத்த கம்பியில், தேர் உரசியதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்த அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்திட வேண்டுமென மாநிலக்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.