திருவனந்தபுரம், ஜுன் 1 - 2021-22 பொருளாதார ஆண்டில் 3500 கோடி ரூபாய் என்ற முதலீட்டு இலக்கை அடைவதற்கான செயல்பாடு களுடன் முன்னோக்கிச் சென்ற தேசிய சேமிப்புத் திட்டத்துறை ரூபாய் 5500 கோடி திரட்டியது. இதுதொடர்பாக தேசிய சேமிப்புத் திட்டத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: சேமிப்பு முதலீடு எனும் இலக்கை நிறைவேற்றுவதற்கு மாவட்ட அளவில் பொறுப்பு வகிக்கும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான அனைத்து அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள் ஆகியோரின் பங்களிப்புடன்தான் நாம் இந்த இலக்கை அடைய முடிந்தது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்க்கும் பொருந்தக்கூடிய கவர்ச்சிகரமான பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் தேசிய சேமிப்புத் திட்டத் துறையில் இருப்பதனால்தான் இந்த சாதனையை நாம் அடைந்தோம். தேசிய சேமிப்பு முதலீடுகள் முழுமையான பாதுகாப்பும் லாபகரமானதுமாகும். ஒன்றிய அரசு வடிவம் கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள் மாநில அரசின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் இலவச சேவைகள் தேசிய சேமிப்புத் திட்டத்தின் முதலீட்டுத் திட்டத்தை மேலும் கவர்ச்சிகரமாக்குகிறது. தபால் அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் பாதுகாப்பாக முதலீடுகளைச் செய்ய முடியும்.
ஒன்றிய அரசு வடிவம் கொடுத்து தேசிய சேமிப்புத் திட்டத்துறை ஊக்கமளிக்கும் முதலீட்டுத் திட்டங்களான சேமிப்பு வங்கி கணக்கு, தபால் அலுவலக சேமிப்பு வைப்புத் தொகை, காலவைப்புத் தொகை, மாத வருமானத் திட்டம், 5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ், பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 10 வயதிற்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமான சுகன்யா சம்ருதி யோஜனா, 124 மாதத்தில் இரட்டிப்பாகும் கிஸான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுடன் மாநில அரசு மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் மாநில கருவூலங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் சேமிப்பு வங்கித் திட்டமான மாணவர் சேமிப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளது. தேசிய சேமிப்புத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் முழுத் தொகையும் மாநிலத்தின் வளர்ச்சி நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதனால் அனைத்துப் பிரிவு மக்களும் தேசிய சேமிப்புத் திட்டத் துறையின் முதலீட்டு சேமிப்பு இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.