கேரளத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சூர் பா.ஜ.க.வின் அலுவலக செயலாளர் திரூர் சதீசன் என்பவர், “தேர்தல்களின் பொழுது மூட்டை மூட்டை யாக ரொக்கப்பணம் திருச்சூர் அலு வலகத்துக்கு கொண்டுவரப்பட்டது” எனும் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். 2021 உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் பொழுது இது நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கவே தாங்கள் அவதாரம் எடுத்ததாக கூறிக்கொள்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். எதிர்கட்சிகள் ஏராள மான நிதி முறைகேடு, ஊழல்களை செய்த தாக பா.ஜ.க. ஓயாமல் குற்றம்சாட்டி வரு கிறது. எதிர்கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளையும் பயன்படுத்துகிறது. ஆனால் பா.ஜ.க.தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழலை சட்டமயமாக்கியது. அது போதாதென்று நேரடியாகவே ஹவாலா பணத்தை தேர்தல் ஆதாயத்துக்காக பயன் படுத்தியுள்ளது என்பது பா.ஜ.க.வின் ஊழியர் மூலமே அம்பலமாகியுள்ளது. இந்த ஹவலா திட்டத்தின் சூத்திரதாரியே பா.ஜ.க. கேரள மாநில தலைவர் கே. சுரேந்திரன்தான் என்பதும் அம்பலமாகியுள்ளது.
கொள்ளைகளும் பின்னணியும்
2021ம் ஆண்டு மார்ச் மாதம் 6 அன்று பெங்களூரிலிருந்து வந்த வாகனம் சேலத்தில் மறிக்கப்பட்டு ரூ 4.4 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 7ம் தேதி கொடக்கரா எனும் இடத்தில் ஒரு காரை விபத்துக்குள்ளாக்கி ரூ 25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது என அந்த காரின் ஓட்டுநர் ஷம்சீர் புகார் கொடுத்தார். இந்த புகாரை காவல்துறையினர் விசாரித்த பொழுது கொள்ளை போனது 25 லட்சம் அல்ல; மாறாக 3.5 கோடி என்பது தெரிய வந்தது. பின்னர் காரின் உரிமையாளர் தர்மராஜனை விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. இந்த பணம் கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது; எவ்வளவு பணம் கொண்டு வரப் பட்டது? யாரிடமிருந்து இந்த பணம் பெறப் பட்டது? யாருக்கு இந்த பணம் போனது? இந்த கேள்விகளுக்கு கேரள காவல்துறை யினர் பதில் கண்டுபிடிக்க புலன் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தர்மராஜன் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் என்பது தெரிய வந்தது. கர்நாடகா பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் எம்எல்சியுமான லெஹர் சிங் என்ப வர்தான் கணக்கில் வராத இந்த பணத்தை தர்மராஜனிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் பெங்களூரை சேர்ந்த சுந்தர்லால் அகர்வால்/ திருச்சூரை சேர்ந்த சுதிர் சிங்/ பிரதீப், மகாரா ஷ்டிராவை சேர்ந்த சச்சின் சேது/ ராஜஸ் தானை சேர்ந்த அசோக் குமார் ஜெயின் ஆகி யோரிடமிருந்து பெறப்பட்டது. தர்மராஜனி டம் விரிவாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணத்தை கேரளாவுக்கு கொண்டு வரச் செய்ததில் பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதும் வெளி வந்தது. இதில் பா.ஜ.க. தலைவர்கள் சுஜய் சேனன்/ கே.ஆர்.ஹரி/ ஜி.கே. காசிநாதன் எம். கணேசன்/ கிரீஷன் நாயர் மற்றும் இறுதி யாக சுரேந்திரனும் விசாரிக்கப்பட்டனர். சுரேந் திரன் முதலில் ஒத்துழைப்பு தரவில்லை. அது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கிய தால் பின்னர் விசாரணைக்கு முன் வந்தார்.
வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
இந்த விசாரணையில் கீழ்கண்ட தகவல் கள் வெளிவந்தன:
• கேரளாவில் 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற தேர்தல் களுக்காக மொத்தம் 53 கோடி ரூபாய் ஹவாலா பணம் கேரளாவுக்குள் கடத்தப்பட்டது.
• இதில் 41 கோடி ரூபாய் கர்நாடகத்திலிருந்து கேரள சட்டமன்ற தேர்தல்களுக்கும் 12 கோடி ரூபாய் உள்ளாட்சி தேர்தல்களுக் கும் கொண்டு வரப்பட்டது.
• இந்த ஹவாலா பணத்தை கொண்டு வர ஏற்பாடு செய்தவர்கள் முகம்மது அலி/ அவரது உதவியாளர் மற்றும் தர்மராஜன் ஆகியோர்.
• இந்த ரொக்கப்பணம் கொண்டு வந்த பொழுது இரன்டு முறை கொள்ளை அடிக்கப்பட்டது.
• இதில் ஒரு கொள்ளை தர்மராஜனின் சகோதரரால் கொள்ளை அடிக்கப்பட்டது என கூறப்பட்டது.
• அப்படியானால் ஹவாலா பணம் கொண்டு வருவதற்கு மீண்டும் ஏன் தர்மராஜனிடமே பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது என்பது புதிர்.
• பாஜகவிற்குள்ளேயே சிலர் இந்த பணத்தை வளைக்க சதி தீட்டினர் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.
• குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பலமுறை பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனும் அவரது மகனும் பேசியது அலைபேசி பட்டியலி லிருந்து தெளிவாகியுள்ளது.
• இந்த முழு ஏற்பாடையும் செய்தது சுரேந்திர னின் கட்டளைப்படிதான் என்பதும் விசாரணையில் வெளி வந்தது.
மவுனம் காத்த ஒன்றிய புலனாய்வு அமைப்புகள்
இது ஹவாலா மோசடி என்பதால் இந்த விவரங்கள் அனைத்தும் அமலாக்கதுறை/ வருமான வரிதுறை/ தேர்தல் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு கேரள காவல்துறை 2021ம் ஆண்டு ஜுன் மற்றும் ஆகஸ்டு மாதமே சமர்ப்பித்து மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு கேட்டுகொண்டது. ஆனால் இது வரை இந்த புலனாய்வு அமைப்புகள் எந்த விசாரணையும் நடத்த வில்லை. கேரள ஆளுநரும் பா.ஜ.க. தலை வர்களை பாதுகாக்கும் நோக்குடன் விசார ணையை தடுத்தார் எனவும் செய்திகள் உள்ளன. எதிர்கட்சிகள் என்றால் பாய்ந்து பாய்ந்து செயல்படும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் இந்த வழக்கில் ஏன் அமைதி காத்தன? ஏனெனில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
திரூர் சதீசன் வாக்குமூலம்
இந்த நிலையில்தான் திருச்சூர் பா.ஜ.க. அலுவலக செயலாளர் திரூர் சதீசன் இந்த தகவல்கள் குறித்து சில திடுக்கிடும் தக வல்களை வெளிப்படுத்தியுள்ளார். தான் பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் இருந்த பொழுது தர்மராஜன் 6 மூட்டைகள் கொண்டு வந்தார்; அப்பொழுது சுரேந்திரன் உட்பட பல பா.ஜ.க. தலைவர்களும் இருந்தனர்; இந்த மூட்டைகளுக்கு தன்னை காவல் காக்கும் படி பா.ஜ.க. தலைவர்கள் கூறினர்; இந்த மூட்டைகளை கொண்டு வந்தவர்களுக்கு விடுதியில் தங்க அறைகள் ஏற்பாடு செய்யப் பட்டன; தான் மூட்டையை பிரித்து பார்த்த பொழுது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது; அடுத்த நாள் சுரேந்திரன் போட்டி யிட்ட கொன்னி சட்டமன்ற தொகுதிக்கு இந்த பணத்தின் ஒரு பகுதி கொண்டு செல்லப் பட்டது; அங்கு பா.ஜ.க.வின் உள்ளாட்சி உறுப்பினர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகப்பட்டது; மேலும் இந்த பணம் திருவனந்தபுரம்/ திருச்சூர்/ கோழிக் கோடு/ பத்தனம்திட்டா/ ஆலப்புழா/ கண்ணூர்/ பாலக்காடு ஆகிய மாவட்டங் களில் தேர்தல்களுக்காக பாஜகவால் பயன் படுத்தப்பட்டது என பல்வேறு விவரங்களை திரூர் சதீசன் வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜகவின் உட்பூசல்கள் காரணமாகவே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது தெளிவு. இந்த தகவல்களை வெளிப்படுத்தி யதற்காக சதீசனுக்கு பல கொலை மிரட்டல் கள் வந்துள்ளன. எனவே அவருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
மிக மோசமான ஊழல் கட்சி
பா.ஜ.க. மிக மோசமான ஊழல் கட்சி என்பதை இந்த தகவல்கள் மேலும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளன. எந்த கருப்பு பணத்தை ஒழிப்பேன் என மோடியும் அமித்ஷா வும் கூறினார்களோ அதே கருப்பு பணத்தை தான் அவர்களது கட்சி தேர்தல் ஜனநாய கத்தையே சீர்குலைக்கப் பயன்படுத்துகிறது.
இது ஒரு துளி தான்
திருச்சூர் ஹவாலா பணம் வெளிவந்தது ஒரு துளிதான்! இப்படி பல ஊழல்கள் உள்ளன என்பது தெளிவு. அமலாக்கதுறை / வருமான துறை/ தேர்தல் ஆணையம் ஆகி யவற்றின் கேடு கெட்ட அணுகுமுறையும் இதில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கு குறித்து 2021ம் ஆண்டே முழு தகவல்களை யும் தந்த பின்னரும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நடவடிக்கையையும் இந்த அமைப்புகள் எடுக்கவில்லை. மாநில ஆளுநரும் பாஜகவுக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளார். இப்பொழுது திரூர் சதீசன் வெளி யிட்ட தகவல்கள் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இந்த விசாரணை நடக்கும் பொழுது பாஜகவின் தகிடுதத்தங்கள் குறித்து மேலும் பல அதிர்வலைகளை உருவாக்கும் செய்திகள் வெளி வரலாம்!
தொகுப்பு: அ.அன்வர் உசேன்,
தகவல்கள் : தேசபிமானி