ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாதென மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட், ஷிவமொக்கா ஆகிய இரு பகுதிகளில் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவிக்கும் மாணவர்களும், இந்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால், அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்குத் தடை விதித்த விவகாரத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷிவமொக்கா மாவட்டத்தின் பாபுஜி நகரிலுள்ள கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்து ஒருதரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர்.
இதேபோன்று பாகல்கோட் பகுதியிலும் இருதரப்பினரிடையே கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த இரு பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.