ஸ்ரீஹரிகோட்டா, ஆக. 10- நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) “சந்திரயான்-3” விண்கலத்தை கடந்த மாதம் 14 அன்று விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணம் மேற்கொண்டு, “சந்திரயான்-3” விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வரும் நிலையில், நிலவில் தரை இறங்கக்கூடிய “சந்திரயான்-3 லேண்டரின்” அடிப்பகுதியில் உள்ள கிடைமட்ட கேமரா மூலம் எடுத்துள்ள புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் காணப்படும் பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் முன்பகுதியிலுள்ள மற்றொரு கேமரா மூலம் பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.