science

img

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் செங்கோட்டை அரசுப்பள்ளி மாணவி

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால்  சனிக்கிழமையன்று   ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட்டது.  ஆதித்யா எல் -1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த  பெண்மணி நிகர்ஷாஜி பணியாற்றியுள்ளார்.  தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் மீரான்-சைத்தூன் பீவி தம்பதியினரின் இரண்டாவது மகள் நிகர்ஷாஜி. இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1980-81-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில்  அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில்  தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலாம் இடம் பிடித்துள்ளார். அதன்பின் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குநராக அறிவிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.  தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். இவர்களுடைய மகன் முகம்மது தாரிக் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.எஸ்.சி. ஏரோநாட்டிகல் முடித்துவிட்டு நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக உள்ளார். மகள் தஸ்நீம் காது-மூக்கு,தொண்டை மருத்துவத்தில் எம்.எஸ்.படித்து வருகிறார்.  நிகர் ஷாஜியின் அண்ணன் ஷேக் சலீம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் செங்கோட்டையில் வசித்து வருகிறார். இவர் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஐஐஎம்-பெங்களூருவில் பணியாற்றியுள்ளார். ஆதித்யா எல்-1-இல் நிகர்ஷாஜியின் பங்களிப்பு குறித்து ஷேக் சலீம் கூறுகையில், “ இஸ்ரோவின் 60 ஆண்டுகால பயணத்தில் சந்திரயான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்ந்துள்ளது.

இந்த வெற்றி அறிவியலுக்கும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மட்டுமல்ல எங்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்கும் கிடைத்துள்ள வெற்றி என்றார். தங்களது குடும்பமே அறிவியல் குடும்பமா எனக் கேட்டதற்கு, “ ஆம் அறிவியல் எங்களுக்குப் பிடித்தமானது என்றார்.  தொடர்ந்து பேசிய அவர் தாம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் படித்தபோது 1979-1984-ஆம் ஆண்டுகளில் இந்திய மாணவர் சங்கத்தின் பங்களிப்போடு செயல்பட்டு வந்த ரிசர்ச் ஸ்டூடண்ட் யூனியன் (Research Student Union)  தலைவராகச் செயல்பட்டேன். செங்கோட்டையில் ரோட்டரி சங்கத்திலும் பணியாற்றியுள்ளேன். தீக்கதிர் நாளிதழில் அறிவியல் சார்ந்த செய்திகள் வெளிவருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்” ‘ஆதித்யா எல்-1’ விண்கலமும் முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் நான்காவது நாடு இந்தியா எனும் சாதனையைப் புரிந்துள்ளது.

ச.நல்லேந்திரன்