science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) நீங்களும் மக்கள் விஞ்ஞானியாகலாம் 

வீட்டில் ஊரடங்கு காலத்தில் பயனுள்ள விதத்தில் நேரத்தை செலவிட விருப்பம்  உள்ளவரா நீங்கள்? அதோடு அறிவியல் ஆர்வம் உள்ளவரா?பல ஆய்வாளர்கள் உங்களைப் போன்றவர்களின் உதவியோடு தரவுகளை சேகரிக்கவும் ஆய்வு செய்யவும் தயாராக உள்ளார்கள். அத்தகைய ஒரு சில ஆய்வுகளை சயின்ஸ் நியூஸ் இதழில் எரின் வெய்மேன் கொடுத்துள்ளார். நாசா விஞ்ஞானிகள் சூரிய பிளாஸ்மா வெடிப்புகள் உள்ளிட்ட சூரிய இயக்கங்களை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.இதில் நீங்கள் உதவலாம்.இணையத்திற்கு சென்று எஸ்டிஒ(SDO-  Solar Dynamics Observatory) எனும் படங்களை பரிசீலனை செய்து சூரிய ஒளிக்கற்றைகள் தெரிகின்றனவா என்பதையும் அந்த நிகழ்வு  குறித்த விவரங்களையும் பதிவு செய்யுங்கள். இந்த தரவுகள் சூரியனைப் பற்றிய ஆய்வுக்கு உதவுவதோடு  எதிர்கால சூரிய ஒளிக்கற்றைகளை அடையாளங்காணும் கணினி நிரல்களை உருவாக்கவும் பயன்படும். உங்கள் ஆய்வுக்கு இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். bit.ly/SolarJetHunter    கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒருவித கள்ளிச் செடிகள் வேகமாகப் பரவுகின்றன. அவை அங்குள்ள இயற்கைத் தாவரங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள காமிராக்கள் மூலம் இலட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இவற்றை எவ்வாறு ஆய்வு செய்வது என்பதற்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.அதன் பின் ‘மக்கள் விஞ்ஞானிகள்‘ அந்தப் புகைப்படங்களில் தாங்கள் பார்த்ததை பட்டியிலடலாம். அதற்கான சுட்டி  bit.ly/PricklyPearProject

2 ) அதிகரிக்கும் நகர்ப்புற மாசு 

2019 ஆம் ஆண்டில் மட்டும் நகர்ப்புற காற்று மாசினால் உலகெங்குமுள்ள பல்வேறு நகரங்களில் 1.8மில்லியன் கூடுதல் இறப்புகள் ஏற்பட்டுள்ளன என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. 2000-2019 ஆண்டுகளில் 13000 நகரங்களில் பிஎம் 2.5 எனப்படும் காற்று  மாசிற்கும் இறப்பு விகிதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆய்வு செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகளைவிட ஏழு மடங்கு கூடுதல்  பிஎம் 2.5 காற்று  மாசு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு  The Lancet Planetary Health journal எனும் இதழில் வெளிவந்துள்ளது.

3 ) நாங்களும் செல்பி எடுப்போமில்லே?

சீனா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள டியான்வென் 1 விண்கலத்திலிருந்து சிறிய ஒரு காமிரா பிரிந்து சென்று அதனை செல்பி எடுத்துள்ளது. இந்த வண்ணப் படங்களில் செவ்வாய் கிரகத்தை அந்த விண்கலம் சுற்றுவதும் அந்த கிரகத்தின் வட துருவத்தில் பனி மூடியிருப்பதும் வறண்ட சமவெளிக் காட்சி ஒன்றும் தெரிகிறது.சீன தேசிய விண்வெளி அமைப்பு இதை தெரிவித்துள்ளது.    

4 ) நடிகருக்கு மரியாதை 

இங்கிலாந்து நாட்டின் கீவ் நகரிலுள்ள ராயல் தாவரவியல் பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரத்திற்கு நடிகர் லியோனார்டோ டி காப்பிரியின் பெயரை சூட்டியுள்ளார்கள்.இந்த மரம் எபோ என்கிற காட்டில் மட்டுமே வளருமாம்.அந்த காடு அருகிவரும் இனத்தை சேர்ந்தது.அந்தக் காட்டில் மரங்கள் வெட்டுவதை தடுப்பதற்கு  இந்த நடிகர் உதவியதால் அவரைக் கவுரவிக்கும் வகையில் மரத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டதாம்.

5 ) கொசு மீன்களின் அட்டகாசம் 

கடந்த நூற்றாண்டில் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு மற்றும் மதிய அமெரிக்கப் பகுதியை சேர்ந்த கொசு மீன் எனும் மீன்வகை நன்னீர் நிலைகளில் ஏராளமாக விடப்பட்டதாம். இது அறிவிலித்தனமான ஒன்றாக மாறிவிட்டது. மலேரியாவைப் பரப்பும் கொசு லார்வாக்களை உண்பதற்குப் பதிலாக இந்த மீன் ,முட்டைகளை விழுங்குவதும் அங்கு இயல்பாக வாழும் மீன்கள், தவளைகளின் வால்களை  கடிக்கத் தொடங்கின. இவற்றை இரையாக உண்ணும் வேறு இனங்கள் இல்லாததால் இவை அச்சமின்றி வாழத் தொடங்கின. இது மிகவும் அழிவுத்தன்மை கொண்ட ஆக்கிரமிப்பு இனமென வகைப்படுத்தப்பட்டது.இவற்றை மொத்தமாக அழிக்க பொறிகள் வைப்பது ,விஷம் கலப்பது  போன்ற மொண்ணையான முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இப்போது அறிவியலாளர்கள் செயற்கை ரோபோ மீன்களைக் கொண்டு இவற்றை அச்சுறுத்தும் முறையைக் கையாளுகிறார்கள்.  சோதனை சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த செயற்கை ரோபோ மீன்கள் கொசு மீன்களின் நடத்தை,உடல் இயக்கம் மற்றும் இனவிருத்தி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது..   இந்த ரோபோ மீன்கள் உடனடியாக செயல்படப்போவதில்லை என்றாலும் இந்த ஆய்வுகள் ‘ஒரு இனத்தின் விரும்பத்தகாத நடத்தையைக் கட்டுப்படுத்த அதை அழிப்பதைத் தவிர வேறு பல வழிகள் உள்ளன என்பதையே காட்டுகின்றன’ என்கிறார் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் குல்ஷா மாரேர் .