science

img

அறிவியல் கதிர் - இரமணன்

தாய் மொழி வெறும் சொற்களல்ல-  நமது பகுதியே

அவரவர் தாயமொழிக்கேற்ப மூளையிலுள்ள மொழிப்  பகுதிகள் வேறுபட்ட வலுவுடனும் வடிவங்களிலும் அமைந்துள்ளன என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 100 மூளைகளின் ஸ்கேன்களை   ஆய்வு செய்ததில்  ஒரே மொழி  பேசும் வெவ்வேறு பிரிவினரின் மூளை இணைப்புகள் வேறுபடுவது தெரிய வந்துள்ளது. ‘ஒவ்வொரு மொழியின் சிக்கல்களும் மூளையில்  தனித்துவமான தடங்களை ஏற்படுத்துகிறது’ என்கிறார் மாக்ஸ் பிளாங்க் மனித அறிதிறன் மற்றும் மூளை அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த நரம்பியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் ஆன்வாண்டேர். ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு விதமான புதிரான வகைமைகளை பயன்படுத்தி வெளிப்படுகிறது. சில மொழிகள் வளமான முன்னொட்டு, பின்னொட்டு ஆகியவைகளை பயன்படுத்தி அடர்த்தியான சொற்களை உண்டாக்குகின்றன. சில மொழிகள் வார்த்தைகள் ஒலிக்கும்  விதத்திற்கு தகுந்தவாறு மாறுகின்றன. இன்னும் சில சொற்றொடர்களுக்கு இடையில் சொற்கள் அமைந்து பொருளை தரும் விதமாக உள்ளன.  நமது மூளை வெள்ளை திசுக்களால் இணைக்கப்பட்ட மண்டலப்பகுதிகளில் இப்படிப்பட்ட வேறுபாடுகளை பகுக்கின்றது. இந்த திசுக்கள் மூளையின் ஒரு பகுதியை மற்றொரு  பகுதியுடன் நீண்ட வடம் போன்ற நரம்பு செல்களால் இணைத்து தொடர்பை விரைவுபடுத்துகின்றன. இப்படி மூளையின் பகுதிகளை இணைப்பதுவே  நாம் கற்பதின் பகுதியாகும். ஒரு இணைப்பை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவு அது வலுவாகிறது. 

அன்வண்டேர் மற்றும் அவரது குழுவினர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மொழிகளில்  ஒன்றை மட்டும்  பேசும் 94 ஆரோக்கியமான  தன்னார்வலர்களின் மூளை எம்ஆர்ஐ ஸ்கேனை ஆய்வு செய்தனர். ஒரு பிரிவினர் அரபி மொழி மட்டும் பேசுபவர்கள். இன்னொரு பிரிவினர் ஜெர்மன் மொழி மட்டும் பேசுபவர்கள். அரபி மொழி பேசுபவர்களின் மூளையில்  இடது மற்றும் வலது கோளங்களுக் கிடையில் வலுவான இணைப்பைக் கண்டனர். ஜெர்மன் மொழி பேசுபவர்களின் மூளையில் இடது பகுதிக்குள் அடர்த்தியான இணைப்புகள் காணப்பட்டன. ‘இது இரண்டு மொழிகளுக்கிடையிலுள்ள தனித்துவமான சிக்கல்களை காட்டுகிறது’ என்கிறார் அன்வாண்டேர். எடுத்துக்காட்டாக அரபி மொழியின் வேர் சொற்கள் சிக்கலானவை. மெய்யெழுத்துக்கள் மூன்று மூன்றாக உயிரெழுத்துக்களுடன் இணைந்து சொற்களை உண்டாக்குகின்றன. அவை ஒலிகளையும் சொற்களையும் பகுக்கும் மூளையின் பகுதிக்கு அதிக முயற்சி எடுக்க வேண்டுவதை ஏற்படுத்துகின்றன. மேலும் வலது புறத்திலிருந்து இடது புறமாக எழுதப்படுவதால் மூளையின் இரு பகுதிகளுக்கிடையே அதிக தொடர்பை கோரலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். ஆனால் ஜெர்மன் மொழி தளர்வான சொல் வரிசைகளைக் கொண்டது. இதனால் சொற்றொடர்களுக்கிடையே வார்த்தைகளை மாற்று வதன் மூலம் நுட்பமான பொருள் மாறுபாடுகளை காட்டக் கூடியது. இதனால்தான் ஜெர்மானியரின் மூளையின் இடது பகுதியில்  வெள்ளை திசுக்கள் அடர்ந்து காணப்படுகிறது. இப்போது ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்துள்ள அராபியரின் மூளையிலும் இப்படிப்பட்ட பகுதிகள் காணப்பட வாய்ப்புள்ள தாக பாஸ்டனிலுள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சென்கான் கூறுகிறார்.

இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில் மூளையின் மொழிச்சுற்று பகுதி மட்டுமே கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப்  பகுதி மொழியை மட்டுமல்லாது பிற விஷயங்களையும் கையாளுகிறது. ஆகவே மொழியைக் கற் கும் நிகழ்வானது  மூளையின் மொழி தவிர்த்த பிற பகுதி களையும் மாற்றலாம். இதனால்  வெவ்வேறு மொழி  அனுபவம் உள்ளவர்கள் பிற விஷயங்களை பகுத்தறிவதும் வேறுபட்டதாக இருக்கும். மொழி தொடர்பான வெள்ளை திசுக்களின் இணைப்பு மறு அமைப்பு செய்யப்படும் போது அவை மொழியை மட்டுமல்லாது பிற விஷயங்களையும் பாதிக்கும் என்பது விவாதத்திற்குரியது . ஆனால் இந்த ஆய்வு முடிவுகள்  தா ய் மொழி என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல; அது நம்முடைய பகுதியாகவே மாறிய ஒன்று என்பதைக் காட்டுகிறது என்கிறார் அன்வாண்டார்.

எண்டோமெட்ரியோஸிஸ்  நோய்க்கு புதிய சிகிச்சை

எண்டோமெட்ரியோசிஸ்(endometriosis) எனப்படுவது பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறு. மாதவிலக்கின்போது கர்ப்பப்பை சுவர் செல்கள் பெயர்ந்துவிடுகின்றன. இவை பிறப்புறுப்பின் வழியே வெளி யேறாமல் எதிர்த்திசையில் சென்று சினைப்பை, கர்ப்பக் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் தங்கிவிடுகின்றன. அங்கு வீக்கம் மற்றும் காயங்கள் ஏற்படும். மாதவிலக்கின்போது இவற்றிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படலாம்; நீண்ட கால இடுப்பு வலி ஏற்படலாம். இந்தக் கோளாறு உள்ளவர்கள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது, உடலுறவு கொள்ளும் போது, நடக்கும்போது வலியை உணரலாம். மலட்டுத்தன்மை, மன அழுத்தங் கள் கூட ஏற்படலாம்.  பிள்ளைப் பேறு பருவத்திலுள்ள பதின்பருவத்தினர், பெண்கள், திருநங்கையாக மாறிய ஆண்கள் ஆகியோரில் 10 சதவீதம் பேரை இந்த நோய் தாக்குகிறது. உலகளவில் 190 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டபின் எட்டு ஆண்டுகள் கழித்தே நோய் கண்டறியப்படுகிறது. ஏனெனில் மாதவிலக்கின்போது ஏற்படும் இடுப்பு வலியை மருத்துவர்கள் சாதாரணமாக ஏற்படும் ஒன்று என்று நினைக்கிறார்கள்’ என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர் நிசிமோட்டோ காகியுச்சி. இவர் டோக்கியோவிலுள்ள மருந்து நிறுவனத்தின் மருந்தியலாளர். கண்டறியப்பட்ட பின்பும் சிகிச்சை முறைகள் குறைவாகவே உள்ளன. இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. வலி போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். அவ்வளவுதான். 

அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றலாம். ஆனால் பலமுறை அவை மீண்டும் தோன்றுகின்றன. சினைமுட்டைகள் உற்பத்தியாவதை தடுத்து மாதவிலக்கை நிறுத்தும் ஹார்மோன் மருந்துகள் ஓரளவிற்கு பலனளிக்கலாம்.ஆனால் இவை பக்க விளைவுகளை உண்டாக்கலாம். என்கிறார்  சிக்காக்கோ மருந்தியல் கல்வி நிலையத்தை சேர்ந்த இனவிருத்தி சுரப்பியிலாளர் செர்தார் புலுன்.   எனவே நிசிமோட்டோ காகியுச்சி குழுவினர் ஆண்டிபாடி எனப்படும் ஒரு நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்கினர். நோய்க்கு முக்கியக் காரணியான ஒரு புரதத்தை அது பற்றிக்கொள்கிறது. பின்  செல்களின் கழிவு நீக்கும் பகுதிக்கு அதை அனுப்பிவிடுகிறது. குரங்குகளுக்கு எண்டோமெட்ரியோசிஸ்  நோயை உருவாக்கி, ஆறு மாதங்களுக்கு ஆண்டிபாடியை ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்தனர். காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஆறுவதும்  அவற்றை உடலின் பாகங்களோடு ஒட்டும் திசுக்கள் சுருங்குவதும் காணப்பட்டது. இவை மீண்டும் உருவாகாது என்கிறார் அந்த ஆய்வாளர்.  இதற்கு அடுத்த கட்டமாக இதை மனிதர்களில் பரிசோதிக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. எண்டோமெட்ரியோசிஸ் நோய்க்கு உள்ள பல சிகிச்சைகளில் ஆண்டிபாடி ஒரு முறை. இதைப்போல புதிய ஹார்மோன் மருந்துகள், ரோபோ உதவியுடன் அறுவை, நடைமுறை களில் மாற்றங்கள் ஆகியவை பிற சிகிச்சை முறைகளாகும்.