நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க, 3 நீதிபதிகள் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டபோது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உண்மையை அறிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். இது தொடர்பான அறிக்கை கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடமிருந்து பெறப்பட்ட பதிலுடன் குழுவின் அறிக்கையையும் சேர்த்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார். இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி மக்களவையில் 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏற்ற சபாநாயகர் ஓம் பிர்லா இவ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இக்குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் மூத்த வழக்கறிஞர் வாசுதேவ ஆச்சார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.