முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 8 பேர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ராயபுரத்தில், திமுக நிர்வாகி ஒருவரை கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜெயக்குமார் கைதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சட்ட விரோதமாக கூடி கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்பும் விதமாக செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பந்தயசாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.