நிலம்பூர், காலிகஞ்ச், மேற்கு லூதியானா, விசாவதர் மற்றும் காடி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளத்தின் நிலம்பூர் தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர் மற்றும் குஜராத்தின் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ புபேந்திர பயானி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ததாலும், மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, பஞ்சாபின் மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, குஜராத்தின் காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் உயிரிழந்த நிலையில் இந்த 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 4 மாநிலங்களில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
கேரள மாநில நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதான் சவுகத் (மொத்த வாக்குகள் - 77,727) வெறும் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிபிஎம் வேட்பாளர் எம்.சுவராஜ் 66,660 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் வெறும் 8,648 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
மேற்கு வங்க மாநிலம் காலிகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிஃபா அகமது (மொத்த வாக்குகள் - 1,02,759) 50,049 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷை (மொத்த வாக்குகள் - 52,710) வீழ்த்தியுள்ளார்.
பஞ்சப் மாநிலம் மேற்கு லூதியானா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்ஜீவ் அரோரா (மொத்த வாக்குகள் - 35,179) 10637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஜிவான் குப்தா 20323 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
குஜராத் மாநிலம் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் இடாலிய கோபால் (மொத்த வாக்குகள் - 75942) 17554 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கிரித் பட்டேலை (மொத்த வாக்குகள் - 58388) வீழ்த்தியுள்ளார். அதேபோல், காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரகுமார் தனிஷ்வர் சவுதா 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்பாய் சவுதா 60,290 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.