india

img

உ.பியில் தலித் மாணவியை சாதி ரீதியில் பேசி தாக்கிய ஆசிரியர்

உ.பியில் ஆசிரியர்களுக்கான தண்ணீரை குடித்த தலித் மாணவியை சாதி ரீதியில் பேசி ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தின் மஹூபா மாவட்டத்தில் உள்ள சிக்காரா என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் குடத்தில் குடிநீர் இல்லாததால் ஆசிரியர்களுக்கான குடத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்திருக்கிறார்.

இதனைக் கண்ட உதவி ஆசிரியரான கல்யான் சிங் என்பவர், அந்த மாணவியை சாதி ரீதியாக பேசி தாக்கியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி பள்ளியில் ஆசிரியர் தன்னை தாக்கியது குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக கிராம மக்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் அந்த ஆசிரியர் கல்யான் சிங், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து விசாரணை நடத்தி நடவடிகை மேற்கொள்ளும்படி மஹூபா கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் ஜிதேந்திர சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

;