எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பி.என்.பி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி வழக்குகளை சிபிஐ, கடந்த 2025 முதல் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத்திற்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எல்.ஐ.சி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
பி.டி.ஒ (BDO) இந்தியா எல்.எல்.பி நிறுவனத்தால் கடந்த அக்டோபர் 15, 2020 அன்று நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் எல்.ஐ.சி இந்தப் புகாரை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ஆர்.காம் மற்றும் அதன் நிர்வாகம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், துணை நிறுவனங்கள் மூலம் நிதியை மாற்றிவிடுவது, போலியான ரசீதுகளுக்குத் தள்ளுபடி வழங்குதல், நிறுவனங்களுக்கு இடையேயான வைப்புத்தொகைகள் அல்லது போலி நிறுவனங்கள் மூலம் திட்டமிட்டு நிதியை மாற்றிவிடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
