கேரளம், குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
கேரளத்தின் நிலம்பூர் தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர் மற்றும் குஜராத்தின் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ புபேந்திர பயானி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ததாலும், மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, பஞ்சாபின் மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, குஜராத்தின் காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் உயிரிழந்த நிலையில் இந்த 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 4 மாநிலங்களில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று அமைதியான முறையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைத்தேர்தல் நடைபெற்றன.
நிலம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 73.26% வாக்குகளும், காலிகஞ்ச் தொகுதியில் 69.85% வாக்குகளும், மேற்கு லூதியானா தொகுதியில் 51.33% வாக்குகளும், விசாவதர் தொகுதியில் 56.89% வாக்குகளும், காடி தொகுதியில் 57.90% வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.