india

img

151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்!

நாட்டில் 151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த தரவுகளின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என 4,693 பேரின் பிரமாணப் பத்திர தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்று ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளன. அந்த ஆய்வின்படி பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 151 பேர் உள்ளதாகவும், இதில் 16 பேர் தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள், 135 பேர் தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எனத் தெரிவித்துள்ளது.

இவற்றில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் 54 பேர் எனவும், அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியில் 23 பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 17 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் மாநிலங்கள் வாரியாக பிரிக்கும்போது மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த 25 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன. ஒடிசாவில் 17 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன.

151 பேரில் 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. இதில் இருவர் தற்போது எம்.பி.யாகவும், 14 பேர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளனர்.