india

கனமழையால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னை மற்றும் புறநகரில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து!

சென்னை மற்றும் புறநகரில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை பெய்ததால், நகரின் முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

சோழிங்கநல்லூர்-தாம்பரம் சாலை, துரைப்பாக்கம் சாலை, தாம்பரம்-மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியதால் நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

சென்னையில் இருந்து காலை 11.20 மணிக்கு சேலம் புறப்பட வேண்டிய விமானம், பிற்பகல் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம், இன்று காலை 10.15 மணிக்கு அபுதாபி செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு, இன்று அதிகாலை 2 மணிக்கு இலங்கையில் இருந்து வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஷாங்காய், சேலம், கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர் மழையால் பயணிகள் வருகை குறைந்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். 

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

பயணியருக்கு விமானங்கள் தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்படுவதால், சிரமம் இன்றி பயணம் செய்கின்றனர்.