சஞ்சு சாம்சனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க கேரளம் திட்டம்
10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் (இந்தியா - நியூஸிலாந்து) ஞாயிறன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3ஆவது முறையாக டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. மேலும் டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 2ஆவது முறையாக மற்றும் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற நாடு என்ற சாதனையையும் இந்திய ஆடவர் அணி படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி திங்களன்று காலை அளித்த பேட்டியில்,”டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான சஞ்சு சாம்சனுக்கு கேரள அரசு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும். மாநில தலைநகரில் (திருவனந்தபுரம்) வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார். எனினும், வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான தேதி குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. எல்லாம் சஞ்சு சாம்சனால்.... இந்திய அணியில் விளையாடிய ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு உழைப்பால் டி-20 உலகக்கோப்பை கிடைத்தது தான். ஆனால் கேரள வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் தான் அரையிறுதி, இறுதி வாய்ப்பு மற்றும் சாம்பியன் பட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. குறிப்பாக இறுதி ஆட்டத்தில் அவர் துவங்கி வைத்த வலுவான அதிரடி தான் இந்திய அணி கோப்பை வெல்ல சாதகமாக அமைந்தது. உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 80.25 சராசரியுடன், 199 ஸ்டிரைக் ரேட்டில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்பலனாக தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
