மார்க்சிய வரலாற்றறிஞர் டாக்டர் கே.என். பணிக்கர் மறைவு
உழைக்கும் வர்க்கமும் விவசாயிகளும் தங்களின் பேராசானுக்குப் புகழஞ்சலி!
திருவனந்தபுரம் / புதுதில்லி, மார்ச் 10 - இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய வரலாற்றாசிரியரும், மதச்சார்பற்ற அறிவுஜீவியுமான டாக்டர் கே.என். பணிக்கர் (90), மார்ச் 9 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காலமானார். அவரது மறைவு உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கும், விவசாய இயக்கத்திற்கும் பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், சிஐடியு மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் செவ்வணக்கத்தையும் தெரிவித்துள்ளன.
மதச்சார்பற்ற வரலாற்றின் பாதுகாவலர்
கே.என். பணிக்கர் வெறும் ஒரு கல்வித்துறை அறிஞராக மட்டும் இருந்தவர் அல்ல; அவர் வரலாற்றை ஒரு போராட்டக் களமாகப் பார்த்த ஒரு பண்பாட்டுப் போர்வீரர் ஆவார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பல பத்தாண்டுகளாகப் பணியாற்றிய அவர், வரலாற்றைத் தொன்மங்களின் அடிப்படையில் அல்லாமல், அறிவியல் ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கத் தலைமுறைகளை உருவாக்கினார். குறிப்பாக, 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலக்கட்டத்தில், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வரலாற்றுச் சான்றுகளுடன் துணிச்சலாக நின்றுப் போராடியவர்களில் அவர் முதன்மையானவர்.
இந்திய விவசாயிகளின் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தவர்
விவசாயிகளின் போராட்டங்களை மார்க்சிய நோக்கில் ஆவணப்படுத்தியதில் அவரது பங்கு அளப்பரியது என அகில இந்திய விவசாயிகள் சங்கம் புகழாரம் சூட்டியுள்ளது. ‘Against Lord and State’ என்ற அவரது புகழ்பெற்ற நூல், மலபார் விவசாயிகள் நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆங்கிலேய ஆட்சிக்கும் எதிராக நடத்திய வீரமிக்கப் போராட்டங்களை வரலாற்றுப் பூர்வமாகப் பதிவு செய்தது. எதிர்ப்பு என்பது வெறும் தேசியவாதமாக மட்டும் இல்லாமல், அது நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதியப் படிநிலைகளுக்கு எதிரான சமூகப் புரட்சியாகவும் இருப்பதை அவர் தனது எழுத்துகளின் மூலம் நிரூபித்தார். இது வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையின் மேன்மையை உலகுக்கு நிலைநாட்டியது என, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் டாக்டர் விஜு கிருஷ்ணன் கூறியுள்ளனர்.
அதிகாரத்திற்கு அஞ்சாத அறிவுஜீவி
கல்வித்துறை காவிமயமாக்கப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கே.என். பணிக்கர், இதற்காக அதிகார மட்டங்களில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) போன்ற அமைப்புகளில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட போதும், வரலாற்று உண்மைகளுக்குப் பதிலாகப் புராணக் கதைகளை நுழைக்கும் முயற்சிகளை அவர் தளராமல் எதிர்த்தார். கேரள மாநில உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராகவும், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிப் பெரும் புகழ்பெற்றார்.
ஒரு மகத்தான மரபு
மக்களுக்கான அறிவியல் இயக்கம் மற்றும் கலாச்சார இயக்கங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட அவர், அறிவு என்பது உழைக்கும் மக்களுக்கான சமூக விடுதலைக்குச் சேவை செய்ய வேண்டும் என நம்பினார். இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதைக்க முயலும் நவபாசிச சக்திகளுக்கு எதிராக கே.என். பணிக்கர் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த மரபு, வரும் தலைமுறைக்கு ஒரு பெரும் வலுவாக அமையும் என சிஐடியு தலைவர் சுதீப் தத்தா மற்றும் பொதுச்செயலாளர் எளமரம் கரீம் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்று உண்மைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த மாபெரும் ஆளுமைக்கு, இந்தியத் தொழிலாளி வர்க்கமும் விவசாயிகளும் செங்கொடி ஏந்தித் தங்களின் செவ்வணக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.
