பிஎஸ்என்எல் காண்ட்ராக்ட் ஊழியர் ஊதிய பாக்கி விவகாரத்தில் அமைச்சரின் பதிலை தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருப்பார்கள் என்றுச சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நான் பி.எஸ்.என்.எல் காண்ட்ராக்ட் ஊழியர் சம்பளப் பாக்கி குறித்து எழுதிய கடிதத்திற்கு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதில் அளித்துள்ளார்.
நான் கடிதம் போட்டது 02.11.2021 அன்று...
பதில் வருவது 11.04.2022 அன்று...
செப்டம்பர் 2021 வரை பல இடங்களில் ஊதிய பாக்கி தரப்பட்டு விட்டது என்று பதில்...
எல்லா இடங்களிலும் தரப்பட்டு விட்டதா என்ற தகவலும் அதில் இல்லை...
பி.எஸ்.என்.எல் ரூ 32 கோடி மண்டல தொழிலாளர் ஆணையர் வாயிலாக தந்தது சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்... இன்னொரு ரூ 40.94 கோடி தந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஏப்ரல் 2022 இல் இவர்கள் பதில் தருவதற்குள் இன்னும் 6 மாத கால ஊதிய பாக்கி ஆகி விட்டது.
அரசு நிறுவனமே இப்படி தொழிலாளர்களை பட்டினி போட்டால் தனியார் நிறுவனங்கள் என்ன ஆட்டம் போடும்! பொதுத் துறை நிறுவனங்கள் "மாதிரி பணியமர்த்துபவர்" என்ற கோட்பாடு உலகமய காலத்தில் காற்றில் பறக்கிறது. இன்று "தனியார் மாதிரி" தொழிலாளர் உரிமைகளை, பயன்களை பந்தாட ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்கள் உழைப்புக்கான ஊதியத்தையே கேட்கிறார்கள். ஆறு மாத கால பாக்கி என்றால் எப்படி வாழ்க்கை நடத்துவது!
ஒன்றிய அரசே, பி.எஸ்.என்.எல் நிர்வாகமே உடனடியாக ஊதிய பாக்கிகளை வழங்கிடு! ஊதியம் வழங்கலை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.