கடவுள்களே! கடவுள்களே!!
பெண் கடவுள்களே!!!
சுகமாக இருக்கிறீர்களா?
பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
வரம் கேட்கத்தான் அழைத்தேன்
ஒருவேளை நீங்கள் வந்துவிட்டால்..
இந்தியாவில் இப்போது இருக்கும் நிலையில்
நான் வருந்தி அழைத்து நீங்கள் விரும்பி வந்துவிட்டால்...
மனம் பதறுகிறது அதனால்
நலம் விசாரிப்தோடு நிறுத்திக்கொண்டேன்.
ஆஸீஃபா,உன்னாவ்,ஹாத்ரஸ் என்று ஒவ்வொன்றாய் வந்தபோதும் பாதிக்கப்பட்டவர்கள் முகமற்ற இஸ்லாமியப் பெண், ஏழைப்பெண்,
பட்டியலினப்பெண்
என்பதால் பாதிக்கப்பட்டதாய் மனதை திடப்படுத்திக்கொண்டேன்.
இதோ!
சாக்சி மாலிக்கை உலகமறியும்.
சாதியில் அவர் பட்டியலினமல்ல.
மதத்தில் இஸ்லாமியரோ கிறிஸ்தவரோ இல்லை.
ஏழையும் இல்லை ஏதிலியும் இல்லை.
ஆனாலும் என்ன?
பிரிஜ் பூஷன் சரண்சிங்
பாஜக எம்.பி.
போலீஸ் ஒன்றும் சாதாரண போலீஸ் அல்ல; அமித்ஷா போலீஸ்.
அரசாளும் மோடி பிரதமர் அல்ல; செங்கோல் ஏந்திய நவீன மகாராஜா.
புரிகிறதா இப்போது?
தப்பித் தவறி காப்பாற்றப்போவதாய் நினைத்து டெல்லிப்பக்கம் போய்விடாதீர்கள்.
அப்புறம்!
நீங்களும் போராட வேண்டியிருக்கும்.
உங்களையும் குண்டுக் கட்டாய் தூக்கி எறிவார்கள்.
அடம் பிடித்தால் கழுத்தில் மிதிப்பார்கள்.
நீங்கள் தப்பித்தவறி அழுதால்
மார்ஃபிங் செய்து மானத்தை வாங்குவார்கள்.
ஆடைவிலக ஆட்டம்போட்டதாய் ஃபோட்டோ போடுவார்கள்.
வெட்கித் தலைகுனிந்து நிற்பது தவிர வேறென்ன செய்யமுடியும் உங்களால்?
வேண்டுமானால்
வீணையை
வாளை
தங்கக் காசுகள் கொட்டும் பானையை
கங்கையில் வீசலாம். மாறுதலுக்காக கடலில் வீசலாம்.
வேறென்ன நடந்துவிடப்போகிறது.
ஆனால் கடவுளர்களே!
ஏதேனும் ஏடாகூடமாய் நடந்துவிடக்கூடாது.
இன்னும் சிறிது காலம் எச்சரிக்கையாய் இருங்கள்.
பிரிஜ் பூஸண் சரண்சிங் எம்.பி.யாய் இருக்கிறார்; அதுவும் பாஜக எம்.பி.
-கே.கனகராஜ்
சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்