அயோத்தி.....
தலைகீழ் நின்று ஜன்ம விமோச்சன யாகம் செய்த
சம்புகனின் தலை வேதம் சொன்ன காரணத்தால்
கருணையின்றி புண்ணியமூர்த்தி இராமன் மூலம்
விசாரணையின்றி ஒரே வெட்டில் கொய்யப்பட்டதும்...
வழக்காறாக, வரலாறாக, கதையாக பார்த்தாலும்
அயோத்தியில் இராமன் பிறந்திருக்கவே முடியாது
ஏனெனில் அவன் தாய்வீடு அங்கில்ல - எனினும்
விசாரணையின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்....
மனு அதர்ம அரசியலுக்காக மட்டும்தான்!
இரண்டையும் செய்தவர்கள் சத்திரியர்களாக
தங்களை நினைத்துக்கொண்டவர்கள்தான் - மூட
கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் ஏற்றவர்கள்தான்?
அயோத்தியில் எழுவது இராமர் ஆலையமல்ல
அது வாக்கு கோரும் அரசியல் ஆலையம்
பத்து ஆண்டுகள் கொள்ளை லாபம் பார்த்த
கார்ப்ரேட் முதலைகள் ஊதி பெருக்கிய கட்டிடம்!
அடுத்து வரும் ஆண்டுகளில் மீண்டும் கொள்ளையிட
முன்தவணை முதலீடு இது என அவர்கள் அறிவர்..
யோசனையின்றி சண்டையிட மூவர்ணம் இருக்க
அவர்களுக்கு இராமர் கச்சா பொருளாக உற்சாகமளிக்கிறார்!
ஆனால் எங்கள் இராமன் யார்?
உள்ளம் தூயவன்; தாயின் நல்லான் குகனை பார்த்து
"இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" என்ற இராமன்!
போர் முனையில் இராவணனை போய் வருவாய் என்ற
நிராயுதபாணிக்கு கருணை கொண்டு இறங்கும் இராமன்!
அயோத்தியில் எழுந்துள்ள வெறும் கட்டிடத்தில்
பாலகன் இராமனை தேடி செல்வது வீண்தான்
வெடியோசைகளில் பயந்து அருகிலிருக்கும் ஏழைகளின்
குடிசையில் அக்குழந்தை இருக்கக்கூடும் - பாருங்கள்!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு