economics

img

2025-க்கு முன் இந்திய பொருளாதாரம் வளர வாய்ப்பு இல்லை..... ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் அடித்துச் சொல்கிறார்.....

புதுதில்லி:
2020-இல் இந்தியப் பொருளாதாரம் மைனஸ் 9.6 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்த நிலையில், நடப்பு 2021-ஆம் ஆண்டில் அது 7.3 சதவிகிதம் என்ற வளர்ச்சியை எட்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

சர்வதேச நாணய நிதியமும் கூட, 2021-இல் இந்தியாவின் ஜிடிபி 11.5 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று கணிப்பு வெளியிட்டிருந்தது.மத்திய நிதியமைச்சர் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் 2020-21 நிதியாண்டில் மைனஸ்7.7 சதவிகிதம் என்ற வீழ்ச்சியையே சந்திக்கும் என்றாலும், 2021-22 நிதியாண்டில் சுமார் 11 சதவிகித பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதனிடையே, இந்தியப் பொருளாதாரம், 2025-ஆம் ஆண்டுக்கு முன்னதாக- கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய அதன் பழைய நிலையை அடைய வாய்ப்பு இல்லை என்று ஐஎம்எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.இந்தியப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி அளவீடுகள் குறித்து ‘எக்னாமிக் டைம்ஸ்’ ஏட்டிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், 2019-ஆம் ஆண்டில், அதாவதுகொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 6 முதல் 7 சதவிகிதவளர்ச்சியில் இருந்தது. இந்த அளவீட்டை மீண்டும் எப்போது இந்தியா அடையும் என்றால், நிச்சயமாக 2025-க்கு முன்னதாக, இந்திய பொருளாதாரம் தனது பழைய நிலையை அடையக் கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த நிலையில்தான் உள்ளன என்று கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.2021-22 நிதியாண்டிற்கான இந்திய அரசின் பட்ஜெட்டை,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இவ்வாறு கூறியிருக்கும் கீதா கோபிநாத், பொருளாதார மீட்சி வேகமானது, பட்ஜெட் வரவு செலவுத் திட்டத்தில் இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களைப் பொறுத்து அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் 2 விஷயங்களை மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டும். ஒன்று தற்போது பொருளாதார மற்றும்வர்த்தகப் பாதிப்புகளைச் சீர்திருத்தும் இதேவேளையில் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் பல கோடி ஏழைக் குடும்பங்கள், கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மேம்பட உதவ வேண்டும். மறுபுறம் நாட்டின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி உட்செலுத்துதல், உற்பத்தியை மேம்படுத்த அதிகளவிலான நிதியை ஒதுக்க வேண்டும்.குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் (MSME) தொழில் நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அதிகச் சலுகைகள் அளிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அதிகள விலான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், வராக்கடன் பிரச்சனைக்குத் தீர்வுகாண மோசமான வங்கி (Bad Bank) என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது பற்றி கூறியுள்ள கீதா கோபிநாத், இது ஒரு சிறந்த யோசனை தான், ஆனால் நாம் சரிசெய்ய முயற்சிக்கும் வங்கி ஒரு பொதுத்துறை வங்கியாக இருந்தால் அது உண்மையில் உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;