districts

img

பணி நியமன முறைகேடு புகார் 2020-21 இல் மதுரை ஆவினில் பணி நியமனம் பெற்ற 30 பேரிடம் இணைப் பதிவாளர் விசாரணை

மதுரை, மே 26- மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்  காணல் மூலம் நிரப்பப்பட்டன. இதில் தகுதி யற்றவர்க்குக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள்கள் வெளியானது, காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, ஒரு பகுதியை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தன.  இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் ஆவின் லஞ்ச ஒழிப்புத்  துறை குழு இரு முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் ஆவின் துணைப் பதிவாளர் கணேசன் தலைமை யிலும் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன. இதனிடையே ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி., தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை தொடர்கிறது.  இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு ஆவினில் பணி நியமனம் ஆணை பெற்று பணி யில் உள்ள 30 பேர் தனது ஆவணங்களுடன் துணைப் பதிவாளர் முன்பாக ஆஜராக கோரி சம்மன் அனுப்பினர்.  விசாரணைக்கு வரும்போது பணிநியமன உத்தரவு, கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து வகை அசல் சான்றிதழ்கள், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  இதனிடையே பால்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ஜவஹர் மதுரை ஆவின்  பணி நியமன முறைகேடு தொடர்பான விசா ரணை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கேட்டறிந்தார் வியாழனன்று காலை 10மணி முதல் மதுரை ஆவினில் பணி நியமன ஆணை  பெற்ற நபர்களிடம் இணை பதிவாளர் கணேசன் விசாரணை மேற்கொண்டார்.