திருநெல்வேலி, அக்.26- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமையன்று வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. மொத்தமாக இந்த பட்டமளிப்பு விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டங்களை பெற்றனர். இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை பெற்ற 111 பேர் முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேர் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர் வெளியிட்டார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா பேருரையை தேசிய புவி அறிவியல் துறை இயக்குநர் சலபதி ராவ் நிகழ்த்தினார். இந்த விழாவில் தமிழக உயர்கல்விதுறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி செழியன் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற 111 பேரில் 97 பேர் பெண்கள் என்பதும், முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.